மதுரை மாவட்டத்தில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிப்பு!

முகக்கவசங்கள் அணியாமல் வெளியே வந்த 1762 பேர் மூலம் 1,83,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற  நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில், 14,753 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள 4-ம் கட்ட ஊரடங்கு உத்தரவில், சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மக்கள் தங்களது தேவைகளுக்காக வெளியே வரும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், மதுரையில் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, மக்கள் வெளியே வரும் போது கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் அபராதம்  விதிக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக சாலையில் முக கவசம் அணியாமல் வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து முகக்கவசங்கள் அணியாமல் வெளியே வந்த 1762 பேர் மூலம் 1,83,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றும், தொடர்ந்து  பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.