மதுரை ஆதீனத்தின் ரகசிய அறைக்கு சீல் வைப்பு – நித்தியானந்தாவின் அறிக்கையால் பரபரப்பு..!

மதுரை ஆதீன மடத்தில் அருணகிரிநாத சுவாமி பயன்படுத்திய அறை தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நேற்றிரவு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மிக பழமையான சைவ சமய திருமணங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்திற்கு தலைமை வகிப்பவர் ஆதீனம் என்று அழைக்கப்படுகிறார்.இதில்அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி என்பவர் 292வது ஆதீனம் ஆகவுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்து,அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால்,மதுரை ஆதீனம் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக நேற்று தகவல் வெளியாகியது.

இந்நிலையில்,மதுரை ஆதீன மடத்தில் அருணகிரிநாத சுவாமி பயன்படுத்திய அறை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நேற்றிரவு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மடத்தின் சொத்து விபரங்கள் அடங்கிய பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ளன.

இளைய பீடாதிபதி:

இதற்கிடையில்,கடந்த 2012 ஆம் ஆண்டு நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாத சுவாமி அறிவித்தார். அப்போது கடும் சர்ச்சைகள்,கருத்து வேறுபாடுகள் எழுந்ததை தொடர்ந்து,அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றார்.இதனையடுத்து, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை இளைய ஆதீனமாக நியமித்தார்.

வழக்கு:

ஆனால்,நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து,பின்னர் வாபஸ் பெறப்பட்டது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  விசாரணைக்கு வந்தபோது,நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுக்களில்,நித்தியானந்தா தன்னை 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டிருந்தார்.ஆனால்,நித்தியானந்தா முறைகேடாக அந்த குறிப்புகளை தயாரித்தார் என மதுரை ஆதீன மடம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.இந்த வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன.மேலும்,மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அறிக்கை:

இந்த நிலையில்,மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில்,”அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் விரைவில் உடல் நலம்பெற பிரார்த்தனை செய்யுங்கள்” என்று நித்தியானந்தா தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தன்னைக் குறிபிட்டுள்ளார்.இதனால்,மதுரை ஆதீனத்தில் உள்ளவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.