“புன்னகையால் அனைவரையும் வசீகரித்த வசந்தகுமாரின் இழப்பு தமிழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு”- டிடிவி தினகரன்

கொரோனார் தொற்றால் உயிரிழந்த வசந்தகுமாருக்கு அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கடந்த ஆகஸ்ட் 10- ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று தெரிவித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. ஹச்.வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வசந்தகுமார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் மூலம் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான திரு.H.வசந்த குமார் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்ததாக தெரிவித்தார்.

மேலும், வணிகத்தில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவரும், உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என்பதை நிரூபித்தவரும், எவ்வித அரசியல் சூழல் ஏற்பட்டாலும் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்த திரு. வசந்தகுமாரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும் என தெரிவித்த அவர், வசந்த குமார் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக பதிவிட்டிருந்தார்.