லாக்டவுனில் விதிகளை மீறினாரா..? ஆர்யா.!

சென்னையில் விதிகளை மீறி ஊரடங்கில் சாலை வழியாக ஜாக்கிங் சென்ற ஆர்யாவின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஜூலை 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் வீட்டுக்கு வெளியே செல்ல கூடாது என்றும்  அரசு ஆணை விடுத்துள்ளது. விதிகளை மீறி வெளியே வருவபவர்களிடமிருந்து  இதுவரை 1 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலு‌ம் சாலை ஓரங்களிலும், பூங்காக்களிலும் மக்கள் நடைப்பயிற்சி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடிகர் ஆர்யா, விதிகளை மீறி ஜாக்கிங் சென்றுள்ளார். சென்னையில் உள்ள ஜமாலியா, ஐ. சி. எப் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சுமார் 18 கிலோ மீட்டர் வரை தனது பயிற்சியாளருடன் ஆர்யா ஜாக்கிங் சென்றுள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே விதிகளை மீறி ஜாகிங் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது. எனவே நடிகர் ஆர்யாவின் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.