“எங்களை வாழ வைத்த தமிழகத்தை வாழ வைக்கவா.. தலைவா வா” -ரசிகர்கள் போராட்டம்..!

சமீபத்தில் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது அங்கு பணிபுரிந்த சிலருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரஜினி தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். பின்னர், அவருக்கு ஏற்பட்ட இரத்தம் அழுத்தம் காரணமாக அங்கு உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

3 நாள் கழித்து ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினார். இதைத்தொடர்ந்து, ரஜினி அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அதில், தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்தார். இவரின் அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. சில ரஜினி ரசிகர்கள் ரஜினி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து, சமூக வலை தளங்களிலும் ரஜினி ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு அழைத்து தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரஜினி ரசிகர்கள் தங்களது பலத்தை காட்ட முடிவு செய்து சென்னையில் இன்று அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை அரசியலுக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ரஜினி ரசிகர்கள் “ஆன்மீக அரசியல் அழைப்பு விழா” என்ற பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ரஜினி ரசிகர்கள் “வா தலைவா வா” என்ற கோஷம் எழுப்பி வருகின்றனர். “எங்களை வாழ வைத்த தமிழகத்தை வாழவைக்கவா.. தலைவா வா” என்ற பதாகைகளையும் ரசிகர்கள் வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

author avatar
murugan