தலைவர்கள் சிலைக்கு முழு ஊரடங்கு நாளிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி!

முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நாளிலும் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸ் பரவலால் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்டு 31 வரையிலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மக்களின் நலன் கருதி சில தளர்வுகளையும் அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் கே சண்முகம் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையில், ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்காக உழைத்த அறிஞர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வருகிறது.

இந்நிலையில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நாட்களிலும் கூட தலைவர்களின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம் என தற்போது அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர் உடன் சென்று மாலை அணிவித்து வரலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மரியாதை செய்யப்படும் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 5 பேருக்கு மிகாமலும், அந்த மாவட்டத்தை சார்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் 5 பேருக்கு மிகாமலும் சம்பந்தப்பட்ட கலெக்டரின் முன் அனுமதி மற்றும் வாகன அனுமதிப் பெற்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் மாலை அணிவித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

author avatar
Rebekal