தெலுங்கானாவில் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் தம்பதி!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரை சேர்ந்த நாகமணி எனும் பெண் வழக்கறிஞரும் அவரது கணவரும் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மே மாதம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம் நகரை சேர்ந்த சீலம் ரங்கையா என்பவர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்நிலையில், இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்றை நாகமணி எனும் பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து நீதி விசாரணை நடத்தவேண்டும் எனவும் தெலுங்கானா நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து போலீசாரிடமிருந்து மிரட்டல் வருவதாகவும், தனக்கும் தனது கணவருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் கடந்த வாரம் வழக்கறிஞர் நாகமணி அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்ததுடன் தங்களுக்கு முறையான பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் பெட்டப்பள்ளி அருகே காரில் பயணம் செய்து கொண்டிருந்த வழக்கறிஞர் நாகமணி மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரையும் வழி மறித்த மர்ம நபர்கள் கத்தியால் அவர்களை கொடூரமாக குத்தியுள்ளனர். வழக்கறிஞர் நாகமணி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்த நிலையில், அவரது கணவர் வாமன் ராவ் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

செல்லும் வழியிலேயே தன்னை குண்டா சீனிவாஸ் என்பவரால் அனுப்பப்பட்டவர்கள் தான் குத்தினார்கள் எனவும் கூறியுள்ளார். அதனை எடுத்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வழக்கறிஞர் தம்பதிகள் பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்த அன்று அவர்களது காரை இயக்கிய டிரைவரை காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

author avatar
Rebekal