வீட்டில் குப்பைகளுடன் லட்சம் – வீதியில் உணவின்றி தவித்த மூதாட்டிகள்!

வீட்டில் குப்பைகளுடன் லட்சம் – வீதியில் உணவின்றி தவித்த மூதாட்டிகள்!

வீடு நிறைய குவிந்து இருக்கும் குப்பைகள் உடன் சில்லறைகளாக பணமும் நகைகளும், ஆனால் தெருவில் ஆதரவற்றவர்களாக சுற்றித்திரிந்த மூதாட்டிகள்.

கடந்த மாதம் பிளாட்பாரத்தில் மகேஸ்வரி என்பவர் உயிரிழந்துவிட்டதாக அவருடன் ராஜேஸ்வரி எனும் மூதாட்டி அடக்கம் செய்ய யாரும் இல்லாததால் சடலத்தோடு அழுதுகொண்டு  இருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மகேஸ்வரியின் உடலை அடக்கம் செய்ய உதவி செய்துள்ளார். அப்போது விசாரித்ததில் மகேஸ்வரி ராஜேஸ்வரி, விஜயலட்சுமி ஆகிய மூவரும் ஒரு வீட்டில் குடியிருந்து உள்ளனர். ஆனால் எப்பொழுதுமே அந்த வீடு பூட்டி நிலையில்தான் இருந்துள்ளது.

இந்நிலையில் ஏன் பிளாட்பாரத்தில் தங்கி இருக்கிறார்கள் என்று விசாரித்த பொழுது, அந்த மூதாட்டி நாங்கள் வீடு நிறைய குப்பைகளை சேகரித்து வைத்துள்ளோம், எனவே வீட்டை திறக்க கூட முடியவில்லை. அங்கு தாங்க முடியாததால் தான் பிளாட்பாரத்தில் தங்கி உள்ளோம் எனவும் கூறியுள்ளார். மூதாட்டி கூறியதை கேட்ட ஆய்வாளர் ராஜேஸ்வரி, காவலர்களுடன் வீட்டை சென்று பார்த்தபோது வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது. உள்ளே செல்ல முடியாத அளவுக்கு டன் கணக்கில் குப்பைகளை சேகரித்து வைத்துள்ளனர். அத்துடன் பாம்பு, பல்லி, ஓணான், தவளை, எலி என அத்தனை அசுத்தங்களும் நிறைந்து வீடு காணப்பட்டுள்ளது.

அப்போது வீட்டில் உள்ள குப்பைகளை ஊழியர்களுடன் அகற்ற தொடங்கிய போது, அங்கு மூட்டையில் சில்லறைக் காசுகள் சிதறி விழுந்துள்ளது. இதுகுறித்து மூதாட்டிகள் கூறும்போது, நாங்கள் குப்பை பொறுக்கி சேகரித்த பணம், நகைகளை இங்குதான் வைத்துள்ளோம் என கூறியுள்ளனர். அதன்பிறகு குப்பைகளை கூட கவனமாக ஊழியர்கள் சுத்தப்படுத்த தொடங்கினார். அப்பொழுது 10, 20, 50, 100 என ரூபாய் நோட்டுகளும், 500, 1000 செல்லாத ரூபாய் நோட்டுகளும் பல கிடைத்துள்ளன. அதுமட்டுமல்லாமல் நான்கு குடங்கள் நிறைய கூடிய அளவுக்கு சில்லரை காசுகள் அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் கிடைத்த ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்த்த பொழுது இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக இருந்துள்ளது. சுமார் ஏழு சவரன் தங்க நகைகளும் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளது. 2 டன் குப்பைகள் அந்த வீட்டில் இருந்து அகற்றப்பட்டு வீடு முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, வீடு இல்லாமல் பிளாட்பாரத்தில் இந்த மூதாட்டிகள் வசிக்கிறார்கள் என்று நினைத்தேன்.

விசாரித்தபோதுதான் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டேன். முதுமை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்ட இவர்கள் பிளாட்பாரத்தில் தங்கி இருந்துள்ளார்கள்; இப்போது வீட்டிலேயே தங்க வைத்துள்ளோம் எனவும் கூறியுள்ளனர். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி மற்றும் வீட்டை சுத்தம் செய்து கொடுத்த மாநகராட்சி ஊழியர்கள் சேவைக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube