கிருஷ்ணகிரியில் வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் குடியரசு தினவிழாவின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுத்திட, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள வரமலைகுண்டா, குருவிநாயனப்பள்ளி, வேப்பனப்பள்ளி, நேரலகிரி, ஜூஜூவாடி, அந்திவாடி, கக்கனூர், பாகலூர் ஆகிய நிரந்தர சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வனப்பகுதியில் ரோந்து
இவர்கள் பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை, முழுவதும் சோதனை செய்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனர். அத்துடன் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை, பர்கூர், காவேரிப்பட்டணம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே நக்சல்கள் இருந்த பகுதி என்பதால் கூடுதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசாரும், வனத்துறையை சேர்ந்தவர்களும் ஆந்திர மாநில எல்லையில் உள்ள எப்ரி, கொங்கனப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, காளிக்கோவில் ஆகிய வனப்பகுதிகளில் துப்பாக்கியுடன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராம மக்களிடம், வனப்பகுதியில் வெளியாட்கள் யாராவது நடமாடினால் உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் செல்போன் எண்களையும் போலீசார் கொடுத்துள்ளனர். இந்த பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …

Leave a Comment