பிறந்தது பெண் குழந்தை.. “எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது”- கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். பின்னர் 2017 டிசம்பர் 11-ல் அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அண்மையில் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ஜனவரி 2021 முதல் நாங்கள் 3 பேர் என பதிவிட்டிருந்தார்.

இதன்காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் இருந்து கோலி விலகி, இந்தியா திரும்பினார். இந்தநிலையில், விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாகவும், தாயும், சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.