#KKRvRCB: பெங்களூரை நொறுக்கி தள்ளிய கொல்கத்தா… 93 ரன்கள் அடித்தால் வெற்றி!

கொல்கத்தா அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 92 ரன்களில் ஆட்டமிழந்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்.

நடப்பாண்டு 14வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகம் துபாய் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், இன்று 31-வது லீக் போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் படிக்கல் களமிறங்கிய நிலையில், சொற்ப ரன்களில் அடுத்தடுத்து இருவரும் விக்கெட்டை இழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த ஸ்ரீகர் பாரத், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், சச்சின் பேபி, வனிந்து ஹசரங்கா ஆகியோர் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் ஜோடி சேர்ந்தது, இருப்பினும் கொல்கத்தா அணி சிறப்பாக பந்து வீசியதால் கடும் தடுமாற்றத்தை கண்ட பெங்களூரு அணி இறுதியில் 19 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள், பெங்களூர் அணியின் சிறந்த பேட்டிங் லயனை நொறுக்கி தள்ளியது என்றே கூறலாம்.

இதனால் கொல்கத்தா அணி 93 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை பெங்களூரு அணி நிர்ணயம் செய்துள்ளது. கொல்கத்தா அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் தலா 3 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்