கொரோனா தளமாக மாறிய கேரளா ஹைப்பர் மார்க்கெட்.!

கேரளாவின் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள 78 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை 10ம் தேதி கேரளாவின் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள டெலிவரி பாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டனர். அதில் முதற்கட்டமாக 91 ஊழியர்களில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அடுத்தக்கட்டமாக நடந்த 81 மாதிரிகள் சோதனையில் 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள 78 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த மார்க்கெட்டை மூட உத்தரவிட்டுள்ளனர். மேலும், கொரோனா பரவலை குறித்து விசாரிக்கவும் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மறு ஆய்வு கூட்டத்தில் மேலும் பேசிய பினராயி, ஜூன் மாதம் தமிழ்நாட்டில் இருந்து பல ஊழியர்கள் கொண்டுவரப்பட்டதாக உளவுத்துறை தகவல் அளித்த போதிலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மை குறித்தும் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மார்க்கெட் எந்த தடையுமின்றி எவ்வாறு இயங்க முடியும், ஏதோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது என்று கூறினார். இதுவரை மார்க்கெட்டில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே கொரோனாவிற்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.