ஐபிஎஸ் உயர் அதிகாரியும் முன்னாள் ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் தடுப்புத் துறை இயக்குநருமான ஜேக்கப் தாமஸை கேரள அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
திருவனந்தபுரத்தில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி நடைபெற்ற விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் ஜேக்கப் பேசியதைத் தொடர்ந்து, அவர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியில், கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும் ஊழலுக்கு எதிராகப் போராட மக்கள் அச்சப்படுவதாகவும் அவர் பேசியதாக அரசுத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கு குறித்து இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ‘ஒக்கி புயலால் கடலில் மாயமான மீனவர்கள், பணக்காரர்களின் பிள்ளைகளாக இருந்தால்கூட அரசு இப்படிப்பட்ட நடவடிக்கையைத்தான் எடுத்திருக்குமா?’ என்றும் ஜேக்கப் அப்போது கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
source: dinasuvadu.com