ஐ.நாவில் காஷ்மீர் குறித்து இம்ரான்…. ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு உடனே வெளியே போ என இந்தியா பதில்…

ஐ.நா.வின் 75-வது ஆண்டு பொதுசபை கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் மெய்நிகர் முறையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி இந்தியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் காஷ்மீர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி மேற்கொண்ட சட்ட நடவடிக்கையை (சிறப்பு அந்தஸ்து நீக்கம்) ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த  குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் உரிமையின் கீழ் இந்தியா அறிக்கை ஒன்றை பொதுசபை அரங்கில் வெளியிட்டது. இதனை, செயலாளரான மிஜிட்டோ வினிட்டோ வாசித்தார். அதில், தன்னைப்பற்றியோ, தனது சாதனையை பற்றியோ, உலகுக்கு நியாயமான பரிந்துரையோ கூற எதுவும் இல்லாத ஒருவரின் (இம்ரான்கான்) இடைவிடாத கொந்தளிப்பை ஐக்கிய நாடுகள் பொதுசபை கேட்டது. வெறும் பொய்கள், தவறான தகவல்கள், போரை தூண்டும் வார்த்தைகளை அதில் நாம் பார்தோம். இதன் மூலம் ஐக்கிய நாடுகளின் சாரத்தையே அவர் இழிவுபடுத்தியுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் ஒரேயொரு சர்ச்சைதான் இருக்கிறது, அது பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மட்டும்தான். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள (ஆக்கிரமிப்பு காஷ்மீர்) ஒட்டுமொத்த பகுதிகளில் இருந்தும் பாகிஸ்தான் வெளியேற வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதியாகும். அங்கு எடுக்கப்படும்  சட்ட நடவடிக்கைகள் அனைத்தும்  கண்டிப்பாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையில் இன்று விஷம் உமிழ்ந்த இதே தலைவர்தான் கடந்த ஆண்டு, தங்கள் நாட்டில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான பயங்கரவாதிகள் இருப்பதாகவும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய யூனியன் பிரதேசமான காஷ்மீரில் போராடுவதற்காக காத்திருக்கிறார்கள் எனவும் பொதுவெளியில் ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு இந்தியா தனது அறிக்கையில் கூறியிருந்தது. இதற்கு, முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் உரை நிகழ்த்தும்போது மிஜிட்டோ வினிட்டோ, ஐக்கிய நாடுகள் பொது அவையை விட்டு அவர் வெளிநடப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kaliraj