ராஜஸ்தானில் பரவிய கப்பா வைரஸ்..11 பேருக்கு தொற்று உறுதி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உருமாறிய கொரோனோவான கப்பா வைரஸ் 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வூஹான் பகுதியில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பல்வேறு உயிர்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது இந்த கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, லாம்டா, கப்பா என பல வகைகளில் உருமாற்றம் அடைந்துள்ளது.

இந்தியாவில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுகள் பரவி வரும் நிலையில் கப்பா வைரஸ்-ம் பரவ ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே உத்திரபிரதேசத்தில் இருவருக்கு கப்பா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் 11 பேருக்கு கப்பா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா, இதுவரை ராஜஸ்தானில் 11 பேருக்கு உருமாற்றம் அடைந்த கப்பா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8 பேர் ஆல்வார் மற்றும் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள்.

மற்றவர்கள் பார்மர் மற்றும் பில்வாராவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டெல்டா வகை கொரோனாவுடன் ஒப்பிடும் பட்சத்தில் இந்த கப்பா வைரஸ் வீரியம் குறைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.