குஷியில் மாணவர்கள்…இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

கன்னியாக்குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் விழாவையொட்டி அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில்,இந்த கோயிலின் மாசி கொடை திருவிழா கடந்த மாதம் இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். குறிப்பாக,பெண்கள் தலையில் இருமுடி கட்டை சுமந்து வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில்,பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கொடை திருவிழா இன்று நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு விழாவையொட்டி கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 9 ஆம் தேதி 2-வது சனிக்கிழமை  பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.எனினும்,அரசின் சில முக்கிய பணிகளுக்காக  தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்களில்  மட்டும்  இன்று செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.