கன்னி பெண்ணாக அவதரித்த கன்னியாகுமரி பகவதி அம்மன் தல வரலாறு!

  • தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கன்னிப் பெண் தெய்வமாக காட்சி அளிக்கிறார்.
  • சிவபெருமான் கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரம் எனும் ஊரில் காட்சி அளிக்கிறார்.

தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் கன்னியாக அவதரித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பகவதி அம்மனின் தல வரலாறு பற்றி தற்போது பார்க்கலாம். அதற்கு ஓர் புராணகால சம்பவம் உள்ளது. விஷ்ணுவை நினைத்து பானாசுரன் எனும் அரக்கன் தவம் புரிந்தான். தவத்தின் பலனாக விஷ்ணு பகவான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு தனக்கு ஒரு கன்னிப்பெண்ணால் மட்டுமே அழிவு வர வேண்டும். மற்ற யாரும் தன்னை கொல்ல கூடாது என வேண்டிக்கொண்டான். அதன்படி வரம் கொடுத்துவிட்டு சென்றார் விஷ்ணு.

கன்னிப்பெண் என்பவள் மென்மையானவள். அவள் ஒருவரை வதம் செய்ய மாட்டாள் என நினைத்து பானாசுரன் தேவர்களையும் தேவலோகத்தில் இருப்பவர்களையும் துன்புறுத்த தொடங்கினான். இதனால் தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். இதனையறிந்த சிவபெருமான். அசுரனை அழிக்க சக்திதேவி யால் மட்டுமே முடியும் என நினைத்து தனது திருவிளையாடலை தொடங்கினார் சிவ பெருமான். அதன்படி சக்திதேவி கன்னிப்பெண்ணாக முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பிறந்தார்.

அதன் பின்னர் சிவபெருமான் அந்த ஊரின் அருகிலேயே சுசீந்திரத்தில் தோன்றினார். பூலோகத்தில் இருக்கும் சிவபெருமான் சக்தி தேவியான பகவதி அம்மனின் அழகில் மயங்கி பகவதி அம்மனை திருமணம் செய்து கொள்ள எண்ணினார். இதனை அறிந்த தேவர்கள் பயந்து போனார்கள். ஏனென்றால், கன்னி பெண்ணால் மட்டுமே பானாசூரனை அழிக்க முடியும். சிவபெருமான் பகவதி அம்மனை திருமணம் செய்து கொண்டால், என்னவாகுமோ என நினைத்து பயந்தனர். இதனை அறிந்த நாரதர் தன் கலகத்தை ஆரம்பித்தார்.

அதாவது, திருமண நாளன்று சூரிய பகவான் தோன்றுவதற்குள் முன்னதாகவே நீங்கள் சென்றுவிட வேண்டும். அவ்வாறு செல்லவில்லை என்றால் நீங்கள் பகவதி அம்மனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என சிவபெருமானிடம் நாரதர் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். திருமண நாளுக்கு முன்னதாக இரவு சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டார் சிவபெருமான். விடிவதற்கு முன்னர் நாரதர் சேவல் ரூபத்தில் தோன்றி கூவினார். இதனை கேட்ட சிவபெருமான் விடிந்து விட்டது என நினைத்து திருமபாவும் சுசீந்திரத்திற்கு சென்று விட்டார்.

இதனை அறிந்த பகவதி அம்மன் கோபத்தின் உச்சிக்கே சென்றார். அக்னி பிழம்பாக கொதித்தெழுந்தாள். அந்தநேரம் பானாசுரன் பகவதி அம்மனை திருமணம் செய்து கொள்ள எண்ணி அம்மனை நெருங்கினான். கடும் கோபத்தில் இருந்த பகவதிஅம்மன் பானாசூரனை வதம் செய்தாள். பின்னர் தேவர்கள், பகவதி அம்மனை சாந்தப்படுத்தினார்கள். அதன் பின்னர் கன்னிப்பெண்ணாகவே பகவதி அம்மன் கன்னியாகுமரியில் காட்சி அளிக்க தொடங்கினாள்.

கன்னியாகுமரி அருகில் சுசீந்திரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாவித்து வருகிறார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.