“காபூல் குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 70க்கும் மேலாக உயர்வு;மன்னிக்க மாட்டோம்” – அமெரிக்க அதிபர் ஜோ பைடென் அதிரடி..!

காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடென் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நேற்று முதலில் விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் பரோன் ஹோட்டல் கேட் அருகே இரண்டாவது தாக்குதல் நிகழ்ந்துள்ளது.இதில் பலர் உயிரிழந்துள்ளதாகவும்,இது மனித வெடிகுண்டு தாக்குதல் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்,அதிபயங்கர சத்ததுடன் வெடித்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்போது வரை 73 க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.அதில் அமெரிக்க வீரர்கள் 12 பேர், 1 மருத்துவர் உட்பட 13 பேர் பலியானதாகவும்,ஆப்கான் மக்கள் சுமார் 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாகவும்,மேலும்,நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.இதற்கு இந்தியா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து,இந்த குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ் தீவிரவாதிகள்தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள நிலையில்,அந்த அமைப்பும் அதனை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.நிலைமை மோசமாக இருந்தாலும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,இதுகுறித்து வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:

“நாங்கள் தலிபான் பயங்கரவாதிகளால் தடுக்கப்பட மாட்டோம். எங்கள் பணியை நிறுத்த விடமாட்டோம். நாங்கள் வெளியேற்றத்தைத் தொடர்வோம்.அமெரிக்கா திட்டமிட்டபடி காபூலில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி ஆகஸ்ட் 31 தேதி வரை தொடரும்.அச்சுறுத்தல் தெரிந்தும், நாங்கள் அதைத்தான் செய்ய வேண்டும் என்று ராணுவம் முடிவெடுத்துள்ளது. அவர்கள் சொல்வது சரி என்று நான் நினைக்கிறேன்.

மேலும்,காபூலில் கொடிய தாக்குதல்களை நடத்தியதில் தலிபான்கள் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கும், அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் எவருக்கும் இதைத் தெரியும்: நாங்கள் மன்னிக்க மாட்டோம். நாங்கள் மறக்க மாட்டோம்.சம்மந்தப்பட்டவர்களை தேடிவந்து நாங்கள் வேட்டையாடி தக்க பதிலடி கொடுப்போம்”,என்று தெரிவித்தார்.