#Justnow:வெளிநாடு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துபாய் எக்ஸ்போவில் கலந்துகொண்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில்,ஐந்து நாள் அரசுமுறை பயணமாக கடந்த மார்ச் மாதம் துபாய்க்குச் சென்றிருந்தார்.இதனைத் தொடர்ந்து,முதல்வர் அபுதாபிக்கும் சென்றார்.

இதனைத் தொடர்ந்து,முதல்வர் மு.க.ஸ்டாலின்,லுலு குழுமத்தின் தலைவர் யூசுஃப் அலியை அபுதாபியில் சந்தித்துப் பேசினார்.அப்போது,லுலு நிறுவனத்துடன் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தின்படி,லுலு நிறுவனம் தமிழகத்தில் ரூ.3500 கோடி முதலீடு செய்து 3 திட்டங்களை தொடங்க உள்ளது என தெரிக்கவிக்கப்பட்டது.

மேலும்,பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதலீட்டாளர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.இதனால்,பல ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.பின்னர்,துபாய்,அபுதாபி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கூறியதாவது: “தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாகத் துபாய்,அபுதாபி போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன்.இந்த பயணத்தின் மூலம்,6 மிக முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப்போகிறது”,என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில்,தமிழக மக்களின் நலனுக்காகவும்,முதலீடுகளை ஈர்க்கவும் முதல்வர் ஸ்டாலின்  அவர்கள் துபாய் செல்லவில்லை  எனவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் குடும்ப சுற்றுலாவாகவும் துபாய் சென்றார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.இதற்கு பதில் அளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,”விமானம் இல்லாத காரணத்தினால்தான தனி விமானத்தில் முதல்வர் பயணம் மேற்கொண்டார் எனவும்,அதற்கான செலவை திமுகவே ஏற்றுக்கொண்டது.எனவே,தனி விமானத்தின் செலவு தமிழக அரசு உடையது அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் லண்டன்,அமெரிக்கா செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் பதவி ஏற்றபின் இரண்டாவது முறையாக அவர் வெளிநாடு செல்கிறார்.

அந்த வகையில்,முதல்வர் அவர்கள் ஜூன் இறுதியில் லண்டனுக்கும், ஜூலையில் அமெரிக்காவுக்கும் சென்று தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது.