#JustNow: விரைவில் அரசியல் பயணம்.. ஜெயலலிதாவை போல் ஆட்சி செய்வேன் – சசிகலா

நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தாரோ அதேபோல் ஆட்சி செய்வேன் என சசிகலா பேச்சு.

சமீப காலமாக வி.கே. சசிகலா கடந்த ஆன்மீகப் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த மார்ச், 21-ஆம் தேதி தனது முதற்கட்ட ஆன்மீகப் பயணத்தை தொடங்கிய சசிகலா, தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு புகழ்பெற்ற கோயில்களுக்கு சென்று வருகிறார். அவ்வப்போது சசிகலாவின் ஆன்மிக பயணம் ஒரு அரசியல் பயணமாகத்தான் பார்க்கப்படுகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் மீண்டும் ஆன்மீக சுற்றுபயணத்தை மேற்கொண்டுள்ள சசிகலா, இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது காரில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறு வியாபாரிகளிடம் திமுகவினர் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுகிறது. இதுபோன்று செயல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது இல்லை. நிறுவனங்கள் அதிகமுள்ள தொகுதியான ஸ்ரீபெரம்பத்தூரில் உள்ளவர்களிடம், மாதம் 10 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு திமுகவினர் கேட்டதாக என்னிடம் நேரடியாக தெரிவித்தார்கள் என கூறினார்.

கடந்த ஓராண்டில் திமுக ஆட்சியில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. இந்த ஆட்சியில் மின்சாரம் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. ஒருவருடம் கடந்தும் இன்னும் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை, இவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து முதியோர் உதவித்தொகை கொடுக்காமல் இருக்கிறார்கள். மொத்தத்தில் மக்கள் மனதில் திமுக ஆட்சி ஒரு வெறுப்பை தான் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

இதன்பின்னர் பேசிய சசிகலா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியை போன்றே குறையில்லா ஆட்சியை கொடுப்பேன், அப்படித்தான் நாங்கள் விரும்புகிறோம் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். மேலும், அதிமுகவை கைப்பற்றுவதற்கு ஒன்றுமில்லை, அதிமுக எங்கள் கட்சி, தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். விரைவில் அரசியல் பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்