பத்திரிக்கையாளர் ராணா அயூப் வெளிநாடு செல்ல அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பிரபல பத்திரிகையாளரான ராணா அயூப் கொரோனா நிவாரணத்திற்காக பொதுமக்களிடமிருந்து 2020-21 ஆம் ஆண்டில் அவர் பெற்ற நிதியைப் பணமோசடி செய்ததாகவும், தன்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்காக அந்தப் பணத்தை வேறு கணக்குக்கு மாற்றியதாகவும் அமலாக்க இயக்குநரகம் 1.77 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரின் சொத்துகளை முடக்கி அவரை விசாரணைக்கு உட்படுத்தியது.
இதற்கிடையில், பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குனரகம் (ED) லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியது. இதற்கிடையில், நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர் ராணா அயூப் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு செல்ல இருந்தபோது விமானநிலைய அதிகாரிகள் அமலாக்கத்துறை வெளியிட்ட ‘லுக் அவுட்’ சுற்றறிக்கை அடுத்து அவரை வெளிநாடு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் ராணா அயூப் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் சர்வதேச பத்திரிகை விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கும், பின்னர் இத்தாலிக்கும் செல்வதாகவும், அங்கு முக்கிய உரையை ஆற்றவிருப்பதாக தெரிவைத்துள்ளார். இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்துள்ளது.