கொரோனா பரவல் காரணமாக 7,000 சிறை கைதிகளுக்கு ஜாமீன் வழங்கும் ஜார்க்கண்ட் அரசு!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 7 ஆயிரம் கைதிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. நாட்டின் பல மாநிலங்களில் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன், தொடர்ந்து உயிரிழந்து கொண்டும் தான் இருக்கின்றனர். குறிப்பாக சிறைகளில் உள்ள கைதிகள் இந்த கொரோனா தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்திலும் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எனவே சிறையிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் வழங்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. எனவே,  7 ஆண்டு சிறை தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளின் பட்டியலை தயாரிக்குமாறு மாநிலத்தில் உள்ள உயர் அதிகார குழு சிறை சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த பட்டியல் தயாரானதும் கோர்ட்டுகளில் மூலமாக அந்த கைதிகளுக்கு இடைக்கால ஜாமீன் அல்லது பரோல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 7 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு தற்போது ஜாமினில் வீட்டுக்கு அனுப்பப்படலாம் எனவும் இதனால் சிறையிலுள்ள கூட்ட நெரிசல் குறையும் எனவும் ஜார்கண்ட் மாநில சிறைத்துறை ஐ.ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal