#BREAKING : ஜல்லிக்கட்டு தீர்ப்பு – தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என முதல்வர் ட்வீட். 

கடந்த 2017-ஆம் ஆண்டு, தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி  உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு பின், ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவசர சட்டமும் இயற்றப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தமிழக அரசு வகுத்த அவசர சட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையானது, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது.

இதன் விசாரணையில், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபல், ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதலுடன் இயற்றப்பட்டதை எடுத்துக்கூறியதோடு, காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதை என பல்வேறு வாதங்கள் விரிவாக முன்வைக்கப்பட்டது.

இதன்பின், ஜல்லிக்கட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதன்படி, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு வாதம் திருப்தி அளிக்கும் விதமாக உள்ளது. என கூறி , தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.