ஜெய் பீம் பட தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவிட நீதிமன்றம் உத்தரவு ..!

ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் ஜெய்ஹிந்த் பீம். இந்த திரைப்படம் ரசிகர்கள் பெருமளவில் வரவேற்பை பெற்றதுடன், இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதித்ததாக பாமக வன்னியர் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து இந்த படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது. மேலும் இந்த காட்சி மூலமாக வன்னியர்களின் மனதை புண்படுத்தி விட்டதாக ஜெய்பீம் தயாரிப்பு நிர்வாகம் நஷ்ட ஈடு 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து ஜெய் பீம் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி வந்த நிலையில், இந்த படத்தில் உள்நோக்கத்துடன் வன்னியர்களை அவமதிக்கும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அந்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக கூறி ஜெய்பீம் பட தயாரிப்பாளர் சூர்யா, ஜோதிகா மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதுடன் இந்த வழக்கு விசாரணை வருகிற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal