“அறுவை சிகிச்சை முடிந்தது.. விரைவில் களத்திற்கு திரும்புவேன்”- ஜடேஜா ட்வீட்!

ஜடேஜாக்கு கையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று நடந்த 3 ஆம் போட்டியை இந்திய அணி டிரா செய்ததால், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனைதொடர்ந்து 4 ஆம் டெஸ்ட் போட்டி, இம்மாதம் 15 முதல் 19 ஆம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் ஜடேஜா, பும்ரா, விஹாரி ஆகிய இந்திய வீரர்கள், 4 ஆம் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். அந்தவகையில் ஜடேஜாக்கு 3 ஆம் நாளில் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து, ஜடேஜாவின் இடது கையில் பட்டு, காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து சிட்னியில் உள்ள மருத்துவமனையில் ஜடேஜா சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அறுவை சிகிச்சை முடிந்து விட்டதால் சில நாட்களுக்கு தன்னால் ஆட முடியாது எனவும், விரைவில் களத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.