“பொய் சொல்வதற்கு அறிவு வேண்டும்…மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப்போனவர்களுக்கு” – அமைச்சர் பிடிஆர் பதிலடி..!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற  45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து வெளியான வதந்திகளுக்கு நிதி அமைச்சர் பிடிஆர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.நாட்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ல் கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேரடியாக நடைபெற்ற நிலையில், கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழித்து,இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றனர்.ஆனால்,தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்துக் கொள்ளவில்லை.

இதனையடுத்து,கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:”ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க, தாமதமாக அழைப்பு வந்ததாலும், முதலில் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் பல முக்கிய நிகழ்வு இல்லாத காரணத்தாலும், தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை”, என விளக்கம் அளித்தார்.

ஆனால்,தனது கொளுந்தியா மகள் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொள்வதனால்,டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்று அமைச்சர் பிடிஆர் கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிதி அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”வடிகட்டிய முட்டாள்தனம்,கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில்.எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும்.பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டுமடா…மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா”,என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,ஸ்பெஷல் விமானம் கிடைக்காத காரணத்தால் கூட்டத்தை புறக்கணித்ததாக வெளியான செய்திகளுக்கு தக்க பதிலடி கொடுத்த பிடிஆர் கூறியதாவது:”காலாவதியான உங்களை போன்ற நபர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.. விமான பயணங்கள் இப்போதெல்லாம் மாறிவிட்டது. மதுரையில் இருந்து லக்னோ செல்ல இரண்டு விமானம் போதும். கூகுளில் சர்ச் செய்து பார்த்தாலே தெரியும்.. கூகுள் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?,என கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, பல ட்வீட்களுக்கு இதேபோல் பிடிஆர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். இவரை குறி வைத்து பொய்யான தகவல்களை பரப்பியவர்கள், அதை ஷேர் செய்தவர்களை டேக் செய்து பிடிஆர் நேற்று இந்த பதில்களை அளித்துள்ளார்.