இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் அலட்சியம் காட்டுவது தவறு – காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

காவலர்கள் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போடாமல் அலட்சியம் காட்டுவது தவறு என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதிலும் கொரோனாவை தவிர்க்கும் விதமாக முன்கள பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் முதல்கட்டமாக முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் அலட்சியம் காட்டும் காவல்துறையினருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் சென்னை பெருநகர காவல்துறையில், கொரோனா பெருந்தொற்றை சவால்களுடன் எதிர்கொண்டு பணியாற்றக்கூடிய காவல்துறையினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், சமீபகால புள்ளிவிபரங்களின்படி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட காவலர்களுக்கு தொற்று பாதிப்பு மிகக் குறைவாகவும், உயிர் இழப்பு ஏற்படாமல் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனவே, முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும் எனவும், இது உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றும் எனவும் கூறியுள்ளார். மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதில் அலட்சியமாகவும், கவனக் குறைவாகவும் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும், அது தவறு எனவும் கூறியுள்ளார்.

இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது என காரணம் கூறாமல் தாமாகவே முன் வந்து கோவிட் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் கு.ஜெகதீசன் 9444488909 மற்றும் துணை ஆணையாளர், ஆயுதப்படை, அலுவலகத்தில் உதவி ஆய்வாளர் தனசேகரன் 9498133763 ஆகியோரை தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal