அண்ணாமலை பேசியதற்கு பதிலளிப்பது என்னுடைய வேலை அல்ல – கர்நாடக முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை

மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை என கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை பதிலடி.

கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்த போது, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் பெரும் மோதல் ஏற்பட்டு வந்தது. அணையை கட்டவிடமாட்டோம் என்று தமிழகத்தில் தீமனங்கள் நிறைவேற்றப்பட்டு, டெல்லி வரை சென்று கோரிக்கை வைத்துவிட்டு வந்தனர்.

அதேபோல் மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கர்நாடக அரசு கூற, இந்த விவகாரம் காரசாரமாக இருந்து வந்தது. இதன்பின் கடந்த சில வாரங்களாக கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் மேகதாது அணை விவகாரம் சற்று தணிந்து இருந்தது.

இதனிடையே, எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய, கர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை பொறுப்பேற்றார். இதன்பிறகு தான் மீண்டும் மேகதாது அணை விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது.

அதாவது, முதல்வராக பொறுப்பேற்ற பசுவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்டும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பிரதமரிடம் அனுமதி பெற்று அணை கட்டும் பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார்.

இதனைத்தொடர்ந்து 2 நாள் பயணமாக கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை டெல்லி சென்று, பிரதமர் மோடி, தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் அமைச்சர்களை சந்தித்து முதல்வராக தேர்ந்தெடுத்தற்கு நன்றி தெரிவித்தாகவும், மேகதாது அணை கட்ட கோரிக்கை வைத்தாகவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மேகதாது அணை குறித்து கர்நாடக முதல்வரின் பேச்சிக்கு பதில் கருத்து தெரிவித்தது, சற்று கவனம் பெறுவதாக இருந்தது. அதாவது, மேகதாது அணையை கட்ட ஒரு செங்கல்கூட வைக்க முடியாது என்றும் கர்நாடக முதல்வரின் பேச்சு தவறானது எனவும் கூறியிருந்தார்.

மேலும், கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, தஞ்சாவூரில் தமிழக பாஜகவின் விவசாய அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பசுவராஜ் பொம்மை, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றும் காவிரியில் கர்நாடகாவுக்கு உரிமையுள்ளது எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்த கர்நாடக முதலமைச்சர், மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது பற்றி எனக்கு கவலையில்லை. யாரவது உண்ணாவிரம் இருக்கட்டும் அல்லது உணவு உண்ணட்டும். எனக்கு அதுபற்றி கவலை இல்லை.

மேகதாது பற்றி அண்ணாமலை பேசியதற்கு பதிலளிப்பது என்னுடைய வேலையும் அல்ல என்றும் பதிலடி கொடுத்துள்ளார். பின்னர், கீழ் பாசன பகுதியினர் அனுமதியின்றி அணை கட்டக்கூடாது என்றும் சட்டம் தெளிவாக உள்ளது எனவும் கூறி, யாரும் அச்சப்பட வேண்டாம், தமிழக பாஜக, தமிழக விவசாயிகளின் பக்கம் நிற்கும், ஏதும் நடக்காது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தமிழக பாஜக எதிர்க்கும் நிலையில், அங்கு பாஜக முதலமைச்சராக உள்ள பசுவராஜ் பொம்மை அணையை கட்டியே தீருவோம் என்று கூறிவருவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதே குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்