முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் பின் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து முதல் அலை, இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு விதமாக பரவி வந்தது.

இதனால் மத்திய அரசு கொரோனா பரவலுக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் கடுமையாக்கி இருந்தது. மேலும் மக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்பொழுது கொரோனா பாதிப்பு பல பகுதிகளில் வெகுவாக குறைந்து வருகிறது. நேற்றுடன் கொரோனா பரவல் ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளும் நிறைவடைந்து விட்டது.

இது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் நடத்திய அமைச்சரவை கூட்டத்தில், கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நாளை முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது குறித்து பேசிய முதல்வர் உத்தவ், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடிய வைரஸை வெற்றிகரமாக எதிர்த்து போராடி வருகிறோம். இன்று அந்த துயரம் மறைந்து வருவதாக தெரிகிறது. எனவே அனைத்து செயல்பாடுகளும் கொரோனா ஊரடங்குக்கு முன்பு இருந்ததுபோல இயங்கலாம், மக்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal