இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என சொல்வது பொய் – பாஜக தலைவர் முருகன்.!

இடஒதுக்கீடு பாதிக்கப்படும் கேபி அன்பழகன் : 

இன்று உயர் கல்வி அமைச்சர் கேபி அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியபோது, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. சிறப்பு அந்தஸ்துக்காக தமிழக அரசு எதையும் பறிகொடுக்க தயாராக இல்லை. நாம் ஏற்கனவே நல்ல நிலையில்தான் இருக்கிறோம், அதனால் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெற்றால் கல்விக் கட்டணம் அதிகரிக்கும். 69% இடஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடும். தொடர்ந்து சூரப்பாவின் நடவடிக்கைகள் சரியில்லாமல் இருந்தால் ஆளுநரின் கவனத்திற்கு இவை எடுத்துச் செல்லப்படும் என தெரிவித்தார்.

இடஒதுக்கீடு பாதிக்கப்படாது எல்.முருகன்:

இந்நிலையில்,  தமிழக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சுதந்திரமாக செயல்பட முயற்சிக்கிறார். சூரப்பாவை சுதந்திரமாக செயல்பட விடாமல் சிலர் தடுக்க முயற்சிக்கின்றனர். துணைவேந்தரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் புகழ் தகுதி கிடைத்தால் இட ஒதுக்கீடு பறிபோகும் என சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். சிறப்பு அந்தஸ்து மூலம் எந்த நேரத்திலும் இடஒதுக்கீடு பாதிக்கப்படாது. இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்பது சொல்வது பொய் என தெரிவித்தார்.

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்தார். அதில்,  அண்ணா பல்கலையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை ஒப்புதலுடன் அறிக்கை தயாரிக்கப்பட்டது .என்னை போல மற்ற துணை வேந்தர்கள் யாரும் அரசை சந்தித்தது இல்லை என தெரிவித்தார்.

சூரப்பா தன்னிச்சையாக கடிதம் எழுதியது தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினர் தொடர்ந்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan