ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும்,120 க்கும் மேற்பட்டவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்ட ராணுவ விமானம்..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் உள்பட மொத்தம் 120க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் இந்திய ராணுவ விமானம் டெல்லி புறப்பட்டது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசு படைகளுக்கும், தாலிபான் படைகளுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதனையடுத்து,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஆட்சி அதிகாரத்தையம்  கைப்பற்றினார்கள்.இதனால்,பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள்,அதிகாரிகள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.

அந்த வகையில், ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று முன்தினம் இந்தியர்கள் 129 பேர் இந்தியா திரும்பிய நிலையில் மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானம் ஆப்கான் தலைநகர் காபூல் செல்ல இருந்தது.

ஆனால்,ஆப்கான் மக்கள் உள்பட பலர் அதிக அளவில் ஒரே நேரத்தில் விமான நிலையத்தில் கூடியதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டு, விமான நிலையம் மூடப்பட்டது.இதற்கிடையில்,கூட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்க படையினரால் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இதில் சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது.இதனால்,அங்கு செல்ல இருந்த 2 விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்தது.

இதனையடுத்து,தாலிபான்கள் வசம் உள்ள ஆப்கானிஸ்தானில் சிக்கிய இந்தியர்களை மீட்க இந்திய ராணுவ விமானம் புறப்பட்டு அங்கு சென்றது.

இந்நிலையில்,இந்திய விமானப்படையின் சி -17 விமானம் இந்திய அதிகாரிகள் உள்பட 120க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் காபூலில் இருந்து இன்று புறப்பட்டுள்ளது.இதற்கிடையில்,ஆப்கானிலிருந்து இந்தியா வருவதற்கு e- emergency X misc விசா முறையில் உடனடி விசா பெற்று கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.