தவறாக குற்றம் சுமத்தப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 1.30 கோடி இழப்பீடு.!

தவறாக குற்றம் சுமத்தப்பட்ட நம்பி நாராயணனுக்கு 1.30கோடி ரூபாய் இழப்பீடை கேரள அரசு வழங்கியுள்ளது.

இஸ்ரோவின் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியவர் நம்பி நாராயணன். இவர் கடந்த 1994-ம் ஆண்டு இஸ்ரோவின் சில முக்கிய தகவல்களை இரண்டு மாலத்தீவு உளவுத்துறை அதிகாரிகளுக்கு விற்றதாகவும், அவர்களுக்காக உளவு  பார்த்ததாகவும் கூறி 2019-ம் ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதனையடுத்து நடந்த சிபிஐ விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்று தெரிய வந்தது. அதனை தொடர்ந்து நம்பி நாராயணன் தன்னை தேவையில்லாமல் கைது செய்து துன்புறுத்தியதாகவும், மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காகவும் கேரள அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.

அந்த வகையில் சிறப்பு அதிகாரியை நியமித்து, அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் கேரள அரசு நம்பி நாராயணனுக்கு ரூ. 1.3கோடி இழப்பீடு வழங்க முடிவு செய்தது. அதன்படி தற்போது சிறப்பு அதிகாரி அளித்த சிபாரிசின் பேரில் கேரள அரசு தவறாக குற்றம் சுமத்தப்பட்ட நம்பி நாராயணனுக்கு 1.30கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்கியுள்ளது.

ஏற்கனவே கடந்தாண்டு கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கேரள அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடை நம்பி நாராயணனுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.