இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு… காவல்துறை தீவிர விசாரனை…

இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு… காவல்துறை தீவிர விசாரனை…

காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர்  தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணற்றில் இஸ்ரோ மையம் அமைந்துள்ளது. இதன் அருகில் தமிழக அரசின் வேளாண்மை துறையின் மலர் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலையில் இந்த மலர் வணிக வளாகத்தில் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு, அருகில் இஸ்ரோ மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி பணகுடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வள்ளியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், 2 நாட்டு வெடிகுண்டுகள் மலர் வணிக வளாக காம்பவுண்டு சுவரில் வெடித்து சிதறியதற்கான அடையாளம் கிடைத்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் ரத்தக்கறைகள் காணப்பட்டது. மேலும் இதுதொடர்பாக அருகில் உள்ள  வீட்டு  பெண்களிடம் காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது, பயங்கர சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வேகமாக சென்றதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர் ஆனந்தி வந்து தடயங்களை சேகரித்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது குறித்து பணகுடி ஆவல்துறையினர்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  மிகவும் பாதுகாப்பு மிகுந்த இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

author avatar
kavitha
Join our channel google news Youtube