கொரோனா தடுப்பூசி போடலையா…? சம்பளம் கட்…! எந்த நாட்டில் தெரியுமா…?

கொரோனா தடுப்பு ஊசி போட தவறினால் அரசு அதிகாரிகளின் சம்பளத்தை ஜூலை மாதம் முதல் நிறுத்துமாறு பாகிஸ்தான் சிந்து மாகாண முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தற்போது அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இருப்பினும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க கூடிய ஒரு  ஆயுதமாக தடுப்பூசி தான் காணப்படுகிறது. எனவே அனைத்து நாடுகளும் மக்களை தடுப்பூசி போடுமாறு அறிவித்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானில், இஸ்லாமாபாத்தில், கொரோனா தடுப்பு ஊசி போட தவறினால் அரசு அதிகாரிகளின் சம்பளத்தை ஜூலை மாதம் முதல் நிறுத்துமாறு பாகிஸ்தான் சிந்து மாகாண முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் முராத் அலி ஷா தலைமையில் கோவிட் -19 தொடர்பான மாகாண பணிக்குழுவின் கூட்டத்தின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜூன்-7ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மீண்டும் திறப்பதற்காக மாகாணத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக ஜுன் 5ம் தேதி வரை கால கெடு கொடுக்கப்பட்டிருந்தது.

சிந்து சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, மாகாணத்தில் இதுவரை 1,550,553 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 1,121,000 பேருக்கு முதல் டோஸ் கிடைத்துள்ளது. மேலும் 4,29,000 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2,028 புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 92 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.