புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா.? திமுக கண்டனம்..!

புதுச்சேரி பேரவைக்கு தேர்வானவர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களையும் கைப்பற்றி புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது.

இதற்கிடையில், புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. அந்த 3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள், இதனால், தற்போது புதுச்சேரி சட்டசபையில் பாஜகவின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது.

3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதால் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,  திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறுகையில் புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா.? புதுச்சேரி மக்களின் தீர்ப்பை பாஜக மாசுபடுத்த வேண்டாம்.

புதுச்சேரி பேரவைக்கு தேர்வானவர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்திருப்பது கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்திற்கு விரோதமான பாஜகவின் நடவடிக்கைக்கு திமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸுக்கு 10, பாஜகவுக்கு 9 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இரு கட்சிக்கு கிட்டத்தட்ட 1 எம்.எல்.ஏ தான் வித்தியாசம். புதுச்சேரியில் 6 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்ளதால் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் எந்த நேரமும், எந்த பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan