மக்கள் செல்வனுடன் இணைகிறாரா அனுஷ்கா.? தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம்.!

விஜய் சேதுபதி மற்றும் அனுஷ்கா இணைந்து நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் . மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ ரணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.மேலும் கமலின் தலைவன் இருக்கின்றான் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி அடுத்ததாக ஏ. எல். விஜய் இயக்கத்தில் நடிப்பதாகவும், அந்த படத்தை ஐசரி கணேஷ் மற்றும் வேல்ஸ் பிலிம் நிறுவனம் இணைந்து தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுஷ்கா முதல் முறையாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இது குறித்து விளக்கமளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், விஜய் சேதுபதி மற்றும் அனுஷ்காவின் படம் தயாரிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்று தெரிவித்துள்ளார். இதிலிருந்து விஜய் சேதுபதி மற்றும் அனுஷ்கா இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. தற்போது ஏ. எல். விஜய் இயக்கத்தில் தலைவி என்ற படமும், அனுஷ்கா கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.