#IPL BREAKING: மும்பையை பந்தாடிய குஜராத்..! பைனலுக்குள் மாஸான என்ட்ரி..!

ஐபிஎல் தொடரின் 2-வது தகுதிச்சுற்று GT vs MI போட்டியில், குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 2வது தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுப்மன் கில் 129 ரன்களும், சாய் சுதர்சன் 43 ரன்களும், ஹர்திக் பாண்டியா 28* ரன்களும் குவித்தனர்.

இதனையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, நேஹால் வதேரா ஜோடி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய திலக் வர்மா அதிரடி காட்டி ரன்கள் எடுத்தார்.

வர்மாவுடன் இணைந்து கேமரூன் கிரீன் ரன்கள் எடுத்த நிலையில், திலக் வர்மா 43 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் களமிறங்கி அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். இதன்பின், சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.

முடிவில், மும்பை அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், திலக் வர்மா 43 ரன்களும், கேமரூன் கிரீன் 30 ரன்களும் குவித்துள்ளார்.

குஜராத் அணியில் மோஹித் ஷர்மா 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த 2வது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குஜராத் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி சென்னை அணியுடன் மோதவுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.