IPL 2018:இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு 5 அணிகள் போட்டா போட்டி!

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இதுவரை ஐதராபாத் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. டெல்லி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.SunRisers Hyderabad

மீதமுள்ள இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே ‘குடுமிபிடி’ நிலவுகிறது. இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ளன. இவை தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும் எஞ்சிய இரு அணிகள் எவை என்பதை தீர்மானிக்கும். இதனால் இந்த ஆட்டங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. 5 அணிகளின் வாய்ப்பு விவரத்தை பார்க்கலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 14 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கடைசி லீக்கில் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு ஐதராபாத் சன்ரைசர்சுடன் மோதுகிறது. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் சிக்கலின்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும். மாறாக தோல்வியை தழுவினால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால் கொல்கத்தாவின் ரன்ரேட் மைனசில் இருப்பதால், கடைசி லீக்கில் தோல்வி அடைந்தால் மூட்டையை கட்டுவதற்கே அதிக வாய்ப்புள்ளது.

கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், சுனில் நரின், தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸ்செல், ராபின் உத்தப்பா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி கடைசி இரு ஆட்டங்களில் கிடைத்த வெற்றிகளால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது நினைவு கூரத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ்: முதல் 6 ஆட்டங்களில் 5-ல் மண்ணை கவ்விய நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பகுதியில் எழுச்சி பெற்று விட்டது. 12 புள்ளிகளுடன் (6 வெற்றி, 7 தோல்வி) பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள மும்பை அணி தனது கடைசி லீக்கில் டெல்லி டேர்டெவில்சை நாளை மாலை எதிர்கொள்கிறது. இதில் கட்டாயம் மும்பை வெற்றி பெற்றாக வேண்டும். வெற்றியை மகசூல் செய்தால், 14 புள்ளிகளுடன் ‘பிளே-ஆப்’ வாய்ப்பில் நீடிக்கும். ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் அந்த அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு உண்டு. மாறாக தோல்வி கண்டால் ரோகித் சர்மா தலைமையில் ஆடும் மும்பை அணி நடையை கட்ட வேண்டியது தான்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் 12 புள்ளிகளே (6 வெற்றி, 7 தோல்வி) பெற்றுள்ளன. கடைசி மூன்று ஆட்டங்களில் டெல்லி, பஞ்சாப், ஐதராபாத் அணிகளை துவம்சம் செய்து ‘ஹாட்ரிக்’ வெற்றி கண்ட பெங்களூரு அணி சரியான நேரத்தில் உச்சநிலையை எட்டியிருக்கிறது. கேப்டன் விராட் கோலி (526 ரன்), டிவில்லியர்ஸ் (5 அரைசதத்துடன் 427 ரன்) ரன்வேட்டையில் மிரட்டுகிறார்கள். பெங்களூரு அணி இன்று தங்களது இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் கோதாவில் இறங்குகிறது. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி மட்டுமே ‘பிளே-ஆப்’ வாய்ப்பில் தொடரும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும். சூப்பர் பார்மில் உள்ள பெங்களூரு அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்க களத்தில் வரிந்து கட்டி நிற்கும். பெங்களுரு அணி வெற்றி பெற்றாலும் உடனடியாக ‘பிளே-ஆப்’ வாய்ப்பை உறுதி செய்ய முடியாது. நாளைய ஆட்டங்களின் முடிவு வரை காத்திருக்க வேண்டும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் காணப்படுகிறது. இந்த அணியும் 12 புள்ளிகளுடன் தான் இருக்கிறது. ஜெய்ப்பூரில் இன்று மாலை அரங்கேறும் ஆட்டத்தில் அந்த அணி பெங்களூருவை தோற்கடித்தால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஜோஸ் பட்லர் (5 அரைசதத்துடன் 548 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தங்களது தேசிய அணிக்கு (இங்கிலாந்து) திரும்பி இருப்பது ராஜஸ்தானுக்கு பெரும் பின்னடைவாகும். அதே சமயம் உள்ளூரில் ஆடுவது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானுக்கு வெறும் வெற்றி மட்டும் போதாது. ரன்ரேட்டிலும் தங்களை திடப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே சந்தித்த லீக்கில் பெங்களூருவை 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் சாய்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்த அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி அடுத்த 7 லீக் ஆட்டங்களில் 6-ல் தோல்வியை தழுவியதால் இப்போது 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ரன்ரேட்டிலும் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் அந்த அணி கடைசி லீக்கில் நாளை இரவு சென்னை சூப்பர் கிங்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ரன்ரேட்டையும் மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே ‘பிளே-ஆப்’ கதவு திறக்கும். அந்த அணிக்கு ஆறுதலான விஷயம் என்னவென்றால் இது தான் நடப்பு தொடரின் கடைசி லீக் ஆட்டமாகும். அதனால் எவ்வளவு ரன்கள் எடுத்தால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதை கணிப்பது சுலபமாக இருக்கும்.

லீக் சுற்று முடிவில் ஒரு கட்டத்தில் 4 அணிகள் 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அவ்வாறான சூழல் உருவானால் ரன்ரேட் தான் அணிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment