தமிழகத்தைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சி;உச்சநீதிமன்றத்தில் வழக்கு – சீமான்…!

தமிழகத்தைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழக அரசு வேடிக்கை:

தென்பெண்ணையாற்றின் துணையாறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே தெதடு தடுப்பணை என்ற பெயரில் மதகுகளின்றி மிகப்பெரிய அணையைக் கட்டி முடித்துள்ள கர்நாடக அரசுக்கெதிராக எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்காது தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது.

ஒரு சொட்டு தண்ணீர்கூட வெளியேறாது:

தடுப்பணை அமைப்புக்குச் சிறிதும் தொடர்பில்லாத வகையில் 162 அடி உயரத்தில் ஒரு சொட்டு தண்ணீர்கூட வெளியேறாதபடி மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட அணையால் வடதமிழகமே பாலைவனமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் தமிழக அரசு அமைதி சாதிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

40,000 ஏக்கர் விளை நிலங்களின் பாசனத்தேவை:

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களின் வழியாக 320 கி.மீ. தூரம் பாய்ந்து, 40,000 ஏக்கர் விளை நிலங்களின் பாசனத்தேவையையும், குடிநீர்த்தேவையையும் நிறைவுசெய்வது தென்பெண்ணையாறாகும். வடதமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது தென்பெண்ணையாறு.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் யார்கோள் என்னுமிடத்தில் தென்பெண்ணையாற்றின் முதன்மைத் துணையாறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கடந்த 2014 ஆம் ஆண்டு, தடுப்பணை கட்டத்தொடங்கியது கர்நாடக அரசு.

தமிழக அரசு ஏன் வலியுறுத்தவில்லை?:

அன்றைய முதல்வர் அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனால், கட்டப்படுவது குடிநீர்த்தேவைக்கான தடுப்பணைதான் என்றும், அதன் கட்டுமானப்பணிகள் 70 விழுக்காடு முடிவடைந்துவிட்டதாகவும் கர்நாடக அரசு முன்வைத்த வாதங்களை ஏற்று 2019ம் ஆண்டு, நவம்பர் 14ம் தேதியன்று, தமிழக அரசு தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசிடம் தமிழக அரசு ஏன் வலியுறுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்பியது.

நடுவர்மன்றம்:

அதனையடுத்து, தென்பெண்ணையாற்று சிக்கலைத் தீர்க்க அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்குழு, கடந்த 2020 ஆம் ஆண்டு, சூலை மாதம் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசிடம் பரிந்துரைத்தது. அவ்வாறு பேச்சுவார்த்தைக்குழு பரிந்துரைத்து ஓராண்டு ஆனபிறகும்கூட, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி இரண்டாண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும், இன்றுவரை தென்பெண்ணையாறு நடுவர்மன்றம் அமைக்கப்படவில்லை.

பதவி சுகம்:

பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியதிகாரத்திலிருந்த முந்தைய அதிமுக அரசு, அதுகுறித்துப் பெரிதாகக் கவலைகொள்ளாது அலட்சியமாகவிட்டதன் விளைவாகவே இன்றைக்கு நதிநீர் உரிமையே பறிபோகிற இழிநிலையில் நிற்கிறோம். மத்தியில் ஆளும் பாஜகவுடன் கூட்டணி வைத்து இணக்கமாக இருந்தபோதிலும் தமிழகத்திற்கான நதிநீர் உரிமையை நிலைநாட்ட சட்டப்போராட்டமும், அரசியல் நெருக்கடியும் கொடுக்காது வேடிக்கைப் பார்த்து நின்ற அதிமுக அரசின் மோசமான செயல்பாடே இவ்வளவு கொடிய சூழலுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

பதவி சுகத்திலும், அதிகார மமதையிலும் திளைத்து மக்களின் நலனை முற்றிலும் மறந்த அதிமுக அரசின் கொடுங்கோல் ஆட்சிமுறையும், ஆண்ட ஆட்சியாளர்களின் பச்சைத்துரோகமுமே கர்நாடக அரசின் இத்தகைய ஆதிக்கப்போக்குக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

தமிழக அரசின் நிர்வாகத் தோல்வி:

புதிதாக திமுக அரசு பொறுப்பேற்றப் பிறகும்கூட அதே நிலை நீடிப்பது என்பதும், தமிழக நீர்வளத்துறையமைச்சர் டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத் துறையமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தென் பெண்ணையாற்றில் கர்நாடக அரசு அணை கட்டியது குறித்து எவ்விதக் கண்டனமோ, நடுவர்மன்றம் அமைப்பது குறித்து எவ்வித முன்நகர்வோ இல்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமின்றி, தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியையும் வெளிக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

அதிர்ச்சியளிக்கும் செய்தி:

அதுமட்டுமின்றி, ஊரடங்குக் காலத்தைப் பயன்படுத்தி, அத்துமீறி தமிழக எல்லைக்கு மிக அருகில் கட்டப்பட்டுள்ள புதிய அணைக்குத் தேவையான கட்டுமானப்பொருட்களான மணல், பைஞ்சுதை (சிமெண்ட்), கல் ஆகியவை தமிழகத்திலிருந்துதான் கொண்டு செல்லப்பட்டன என்று வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

கர்நாடக அணை கட்டுவதற்குத் தேவையான கட்டுமானப்பொருட்கள் தமிழகத் திலிருந்து எப்படிக் கொண்டு செல்லப்பட்டது? எல்லையில் அதிகாரிகள் அதனை ஏன் தடுக்கவில்லை? அவ்வாறு கொண்டு செல்லப்படும் வரை கிருட்ணகிரி மாவட்ட மக்கள் பிரதிகளான பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? அவர்களுக்குத் தெரியாமல் இது நடந்ததா? அல்லது அவர்களின் துணையோடு முறைகேடாக இது நடைபெற்றதா? என்ற எந்தக் கேள்விக்கும் பதிலில்லை.

காவிரி நதிநீர் உரிமை:

இன்னொருபுறம், காவிரி நதிநீர் உரிமையைப் பெறுவதற்கு அரை நூற்றாண்டு காலமாக நடைப்பெற்ற பல்வேறு கட்டப்போராட்டத்திற்குப் பிறகும்கூட மிகச்சொற்ப அளவு நீரையே தமிழ்நாடு பெறும்படி நேரிடுகையில், அதையும் தடுக்கும் விதமாக கர்நாடக அரசு பாஜக அரசின் துணையுடன் மேகதாது அணையைக் கட்டத் தீவிரமாக முயற்சியெடுக்கிறது எனும் செய்தி பெருங்கவலையைத் தருகிறது.

திரு மேனி செழித்த தமிழ்நாடு :

காவிரி தென்பெண்ணைப் பாலாறு தமிழ் கண்டதோர் வையைப் பொருனை நதி – என மேவிய யாறுகள் பலவோடத் – திரு மேனி செழித்த தமிழ்நாடு எனும் பெரும்பாவலன் பாரதியின் பாடல் வரிகளிலுள்ள ஆறுகள் ஐம்பதாண்டு காலத் திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளினால் இன்று உயிர்ப்போடு இல்லை. அடுத்தத் தமிழ்த்தலைமுறை இப்பாடலில் மட்டும் தான் ஆறுகளைப் பார்க்கமுடியும் என்பதைப்போலக்

கண்ணுக்குமுன் காவு:

கடந்த பத்தாண்டுகளில் இரு திராவிடக் கட்சிகளும் மாறிமாறி 37க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தங்கள் கைகளில் வைத்திருந்தபோதும், காவிரி, தென்பெண்ணை என வரிசையாகத் தமிழகத்தின் வாழ்வாதார நதிநீர் உரிமைகளைக் கண்ணுக்குமுன் காவுகொடுத்து நிற்கதியற்று நிற்கச் செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு :

ஆகவே, தமிழகத்தைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இனியாவது விழிப்புடன் செயல்பட்டு, அத்துமீறிக் கட்டுப்பட்டுள்ள அணை குறித்தும், தென்பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாகவும் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும், தென்பெண்ணையாற்று அணைபோல அலட்சியமாக இருந்துவிடாமல் காவிரியாற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்ட முயற்சிக்கும் மேகதாது அணையை எவ்வித சமரசமுமின்றிச் சட்டப்போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தி தமிழகத்தின் நதிநீர் உரிமையை நிலைநாட்ட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.