நீட் தேர்வு மையங்களில் உள்ளாடை சோதனை… கடைசி நேரத்தில் ஆடைகளை மாற்றிய மாணவர்கள்…

மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்க நீட் தேர்வு மையங்களில் நடந்த சோதனை குறித்த மாணவர்களின் புகார்கள் தற்போது வெளிவந்துள்ளன.

நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவப்படிப்புக்கான இளநிலை நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. 4,000-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற இந்த நுழைவுத்தேர்வில் கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் எழுதினர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, தேர்வு எழுத வந்த மாணவர்களும் கடுமையான சோதனைக்குப் பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேசிய சோதனை நிறுவனம்(NTA) நடத்திய இந்த தேர்வில், விதிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாட்டால் கடைசி நிமிடத்தில் உடையில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது என சில மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.

குறிப்பாக மகாராஷ்டிராவிலும், மேற்கு வங்காளத்திலும், சில மாணவ, மாணவியர்கள் தங்கள் ஆடைகளை கழற்றி திருப்பி அணியுமாறும் அல்லது பெற்றோருடன் உடைகளை மாற்றிக் கொள்ளும்படி கேட்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிகழ்வுகள் குறித்து சக மாணவர்களால் சமூக ஊடகங்களில் புகாரளிக்கப்பட்டன.

சில மாணவர்கள் தங்கள் பேண்ட்களில் பாக்கெட் இருந்ததால் வேறு உடை மாற்றுமாறு கூறியதால் அருகிலுள்ள கடைகளுக்கு அவசர அவசரமாக சென்றனர், மாணவிகள் ஜீன்ஸ் அணிந்து வந்ததால் பெற்றோர்களின் உடைகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறியதால், அவர்களும் உடைமாற்றும் அறை இல்லாமல் வேறு வழியின்றி பொது இடத்தில் மாற்றிக்கொண்டனர்.

இது தவிர பல மாணவிகள் தங்களது உள்ளாடையின் ப்ரா பட்டை முதற்கொண்டு சோதனை செய்யப்பட்ட விதம் மற்றும் உள்ளாடைகள் திறந்து காட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டது குறித்து புகார் கூறினர். ஒரு மருத்துவ குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் கூறும்போது, ஒரு மையத்தில் உள்ள பெண் மாணவிகள் தங்கள் குர்தாக்களை கழற்றி மாற்றி அணிய வைத்தது குறித்து அவர்களது மகள் கூறியதாக தெரிவித்தனர்.

மேலும் இது போன்ற செயல்களை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், மாணவர்கள் முக்கியமான தேர்வுக்கு செல்லும்போது தேர்வு மையத்தினர் இவ்வாறு அவர்களை நடத்தக்கூடாது, இது மனதளவில் மாணவர்களை பாதிக்கிறது என்று கூறினர்.

பல மாணவர்கள் தங்களது பேண்ட்களை மாற்றவேண்டியிருந்தது, மேலும் உள்ளாடைகளையும் திறந்து காட்டும்படி கூறப்பட்டதாக புகார் தெரிவித்தனர். மாணவியர்களுக்கு தங்களது உடைகளை திறந்தவெளியில் மாணவர்கள் இருக்கும் இடங்களில் மாற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

author avatar
Muthu Kumar