#INDvsSA:பந்து வீச்சில் தெறிக்க விட்ட ஹர்ஷல்,சாஹல்;முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா!

தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐபிஎல் முடிந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்ட நிலையில்,டி20 தொடர் தொடங்கு முன்பே முக்கிய வீரரான கேஎல் ராகுல்,குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினர்.ஏற்கனவே,அணியில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், முக்கிய வீரராக கருதப்பட்ட கேப்டன் ராகுலும் தொடரில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

கேஎல்ராகுல் விலகியதால்,இந்திய அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். அந்தவகையில் இளம் வீர்ரகளை கொண்டு களமிறங்கிய இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்தது.இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே நேற்று டி20 தொடரின் 3-வது போட்டி விசாகப்பட்டினம் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது.அதன்படி,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனால்,மறுபுறம் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர்.பின்னர் இருவரும் அரை சதம் அடித்து அணிக்கு ரன்களை குவித்துக் கொண்டிருந்த நிலையில்,ருதுராஜ் 57 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அதன்பின்னர்,களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களில் ஆட்டமிழக்க,அவரைத் தொடர்ந்து இஷானும் 54 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.இதனையடுத்து,களமிறங்கிய அணியின் கேப்டன் ரிசப் பன்ட் வந்த வேகத்திலேயே 6 ரன்களில் விக்கெட்டை இழக்க,ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தார்.

இறுதியில்,20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணியினர் 179 ரன்கள் எடுத்தனர்.தென்னாப்பிரிக்கா அணியைப் பொறுத்தவரை பிரிட்டோரியஸ் அதிகபட்சமாக இரு விக்கெட்டுகளும்,மகாராஜ்,ஷம்சி ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து,180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டெம்பா பவுமா,ரீசா ஹென்ட்ரிக்ஸ் களமிறங்கினர்.ஆனால்,வந்த வேகத்திலேயே டெம்பா பவுமா அக்சரின் பந்து வீச்சில் அவேசிடம் கேட்ச் கொடுத்து எட்டு ரன்களில் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து,ரீசாவும் ஹர்ஷல் படேலின் பந்து வீச்சில் சாஹலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

இதனைத் தொடர்ந்து,களமிறங்கியவர்களும் அடுத்தடுத்து மிகச் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க 19.1 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா அணியினர் 131 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதனால்,48 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.இந்திய அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளும்,யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 5 போட்டிகளை கொண்ட தொடரில் தென்னாபிரிக்கா 2 -1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

Leave a Comment