#INDvsSA:டி20 போட்டிக்கான டிக்கெட் கட்டணம் திருப்பி தரப்படும் – கேஎஸ்சிஏ அறிவிப்பு!

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதன்படி,தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இளம் வீர்ரகளை கொண்டு களமிறங்கிய ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி தோல்வியுற்றது.

இதனையடுத்து,நடைபெற்ற டி20 தொடரின் 3,4 வது போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது.இதனைத் தொடர்ந்ந்து,இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது.இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்று சமநிலையில் இருந்ததால்,இத்தொடரைக் கைப்பற்றி கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணியினருமே தீவிரம் காட்டினர். எனவே,இப்போட்டியில் வெற்றி பெற்று டி-20 கோப்பையை கைப்பற்றப்பவது யார்? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால்,ஐந்தாவது மற்றும் கடைசி ஆட்டம் மழையின் காரணமாக வெறும் 3.3 ஓவர்களிலேயே கைவிடப்பட்டது.இதனால்,தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்த பின்னர் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

இந்நிலையில்,இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான ஐந்தாவது டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கியவர்களுக்கு 50 சதவீதம் பணம் திரும்ப வழங்கப்படும் என்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக,கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க (கேஎஸ்சிஏ) பொருளாளரும் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான வினய் மிருத்யுஞ்சயா கூறுகையில்:”கனமழை காரணமாக சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா 5வது டி20 போட்டியில்,முதலில் பேட்டிங் செய்த இந்தியா மூன்று ஓவர்களுக்கு மேல் விளையாடிய பின்னர் மழையின் காரணமாக கைவிடப்பட்டதற்கு கேஎஸ்சிஏ வருத்தம் தெரிவிக்கிறது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி,ஒரு பந்து கூட வீசப்பட்டால், பணத்தைத் திரும்ப வழங்கும் நடைமுறை இல்லை.இருப்பினும், கிரிக்கெட் ரசிகர்களுக்கு அனைத்து கட்டண டிக்கெட்டுகளுக்கும் 50 சதவீதத் தொகையைத் திருப்பித் தர முடிவு செய்துள்ளது.தேதிகள்,நேரம் மற்றும் இடம் ஆகியவற்றுடன் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்.

எனவே,பணம் செலுத்திய அனைத்து டிக்கெட் வைத்திருப்பவர்களும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு தங்கள் அசல் டிக்கெட்டுகளை வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அடுத்ததாக அயர்லாந்துடன் ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் டப்ளினில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment