இந்தியா-நியூசிலாந்து இடையே 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 385 ரன்கள் குவித்துள்ளது.
நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோரின் அதிரடியால் முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர். ரோஹித் சர்மா தனது 30 ஆவது சதமடித்த நிலையில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். கேப்டனை தொடர்ந்து கில்லும் தனது சதத்தை நிறைவு செய்தவுடன் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி(36 ரன்கள்), இஷான் கிஷன்(17 ரன்கள்), சூர்யகுமார் யாதவ்(14 ரன்கள்) என சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தனர். ஒருபுறம் ஹர்டிக் பாண்டியா( 54* ரன்கள்) நிலைத்து நின்று அரைசதம் கடக்க மறுபுறம் விக்கெட்கள் விழுந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்கள் குவித்துள்ளது.
கடைசி நேரத்தில் அதிகபட்சமாக ஹர்டிக் அதிரடியாக விளையாடி 3 போர்கள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 54* ரன்களும், ஷர்துல் தாக்குர் 25 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி மற்றும் பிளேர் டிக்னர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.