#INDvNZ:  நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றிய இந்திய படை ..!.

 நியூசிலாந்தை 73 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் 3-வது போட்டி இன்று  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரராக ரோகித் சர்மா, இஷன் கிஷன் இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி வந்த இஷன் கிஷன் 29 ரன்னில்  விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சூரியகுமார் யாதவ்  ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்து களம் கண்ட ரிஷாப் பண்ட் வந்த வேகத்தில் 4 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா 31 பந்தில் 56 ரன்கள் எடுத்து  விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 25, வெங்கடேஷ் ஐயர் 20, ஹர்ஷல் படேல் 18, தீபக் சாஹர் 21* ரன்கள் விளாச இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 184 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னர் 3, டிரென்ட் போல்ட், ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், இஷ் சோதி தலா 1 விக்கெட்டை பறித்தனர். நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக  மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல் களமிறங்க ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் டேரில் மிட்செல்  5 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ் அடுத்தடுத்து அக்சார் படேல் ஓவரில் டக் அவுட் ஆனார்கள்.

பின்னர் களம் கண்ட வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசி 51 ரன்கள் எடுத்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள். இதனால், இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அக்சார் படேல் 3, ஹர்ஷல் படேல் 2, வெங்கடேஷ் ஐயர் யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர் தலா 1 விக்கெட்டை பறித்தனர். இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது.

author avatar
murugan