#INDvENG: ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.. காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட முக்கிய வீரர்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடரில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆம் மற்றும் இறுதி டி-20 போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-2 என்ற கணக்கில் டி-20 தொடரையும் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், வரும் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை புனேவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை இந்திய அணி அறிவித்தது. இதில் பும்ரா, ஷமி, ரவிந்திர ஜடேஜா, மயங்க் அகர்வால்க்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதற்கு பதில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி, இந்தியாக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் மோர்கன் கேப்டனாக பதவியேற்றார். ஜோப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும், புனேவில் உள்ள மைதானம் சுழற்பந்திற்கு சாதகமான மைதானம் என்பதால், அணியில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சிலே சேர்க்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, ஜேக் பால், கிறிஸ் ஜோர்டன், டேவிட் மலான் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், ஜேஸன் ராய், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளே, அதில் ரஷித், மாட் பார்க்கின்ஸன், மார்க் உட் ஆகியோர் அணியில் உள்ளனர்.