சர்வதேச சட்டங்களையும், நாடுகளின் இறையாண்மையையும் உலக நாடுகள் மதிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் பிரதமர் மோடி பேட்டி.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்காவின் WSJ என்ற ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காததற்காக அமெரிக்காவில் இந்தியா பெற்ற விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் நிலைப்பாடு உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டதாகவும் நன்கு புரிந்துகொள்ளப்பட்டதாகவும் நான் நினைக்கிறேன். இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை அமைதிதான் என்பதில் உலகம் முழு நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்தியா நடுநிலையாக இருப்பதாக சிலர் சொல்கின்றனர்; ஆனால், நாங்கள் நடுநிலையாக இல்லை; அமைதியின் பக்கம் நிற்கின்றோம். சீனாவுடனான இயல்பான இருதரப்பு உறவுகளுக்கு, எல்லைப் பகுதிகளில் அமைதியும், குழப்பம் இல்லாத சூழலும் அவசியம்.
இந்தியா எந்த நாட்டையும் மாற்றப் பார்க்கவில்லை. உலகில் தனக்கான சரியான இடத்தைப் பெறுவதாகவே பார்க்கிறோம். சர்வதேச சட்டங்களையும், நாடுகளின் இறையாண்மையையும் உலக நாடுகள் மதிக்க வேண்டும். முறையான பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும்; போர்கள் மூலம் அல்ல என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையில் நம்பிக்கையை வெளிப்படுத்திய மோடி, இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே முன்னோடியில்லாத நம்பிக்கை உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் விரிவடையும் அவர்களது கூட்டாண்மையின் “ஒரு முக்கிய தூண்” என்று அவர் தெரிவித்துள்ளார்.