TokyoParalympics:டேபிள் டென்னிஸ்;இந்தியாவின் பவினா பென் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை..!

டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில்,இந்தியாவின் பவினா பென் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

அதன்படி,நேற்று முன்தினம் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு  காலிறுதி போட்டியில் உலகின் நம்பர் 2 வீராங்கனையான செர்பியாவை சேர்ந்த பெரிக்கை  11-5, 11-6, 11-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தி, பவினா அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில்,பவினா படேல் சீனாவின் மியாவோ ஜாங்கை எதிர்கொண்டார்.இப்போட்டியின் இறுதியில்,பவினா 3-2 (11-7, 7-11, 4-11, 11-9, 8-11) என்ற செட் கணக்கில் மியாவோவை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.இதனால்,பவினா பென் படேலுக்கு வெள்ளி அல்லது தங்கம் கிடைக்க வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில்,இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் பவினா,உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீனாவின் ஜோஃவ் யிங்கை எதிர்கொண்டார்.மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சீன வீராங்கனை இந்தியாவின் பவினா பென் படேலை 3:0 (11-7, 11-5, 11-6) என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

இதனால்,பவினா பென்னுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.மேலும்,பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.