நாங்கள் முதலில் பயன்படுத்த மாட்டோம்..ஆனால்?-ஜ.நாவில் இந்தியா சூளுரை

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளுக்கு எதிராக இந்தியா முதலில் அணு ஆயுதங்களை  பயன்படுத்தாது என்று, வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொது சபையில், சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது இந்நிலையில்  நேற்று இச்சபையின் சிறப்பு கூட்டம் . ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலமாக நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா பங்கேற்று பேசியதாவது: தேசிய பாதுகாப்பிற்கு அணு ஆயுதங்கள் முக்கியம் என்று சில நாடுகள் கருதுகின்றது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அணு ஆயுதங்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் முடங்கி விட்டது. படிப்படியான செயல்முறை வாயிலாக, அணு ஆயுதக் குறைப்பு என்கிற இலக்கை அடைய முடியும் என்று இந்தியா நம்புகிறது.

அணு ஆயுதங்களை கொண்ட நாடுகளுடன், அர்த்தமுள்ள பேச்சு நடத்தினால், உடன்பாடு ஏற்படும் என்று முழுமையாக நம்புகிறோம்.அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாடுகளுக்கு எதிராக, அணு ஆயுதங்களை இந்தியா ஒரு போதும் முதலில் பயன்படுத்தாது. அதேபோல, அணு ஆயுதமற்ற நாடுகளுக்கு எதிராகவும், அணு ஆயுதங்களை என்றும் பயன்படுத்தமாட்டோம். இந்த கொள்கைகளை இந்தியா எப்போதும் கடைப்பிடிக்கும்.

கடந்த, 1982 முதல்  ஒவ்வொரு ஆண்டும், ஜ.நா பொது சபையில் தாக்கல் செய்யப்பட்டு வரும் வருடாந்திர தீர்மானத்தில் அணு ஆயுத பயன்பாடு, மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்செயல் போன்றவற்றை எல்லாம் ஐ.நா விதிகளை மீறும் செயல் என்று  தொடர்ந்து இந்தியா குறிப்பிட்டு வருகிறது.

இந்தியாவின் இந்த தீர்மானத்திற்கு, பெரும்பாலான நாடுகள் முழு ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் அணு ஆயுதங்களை குறைக்கவும், அதன் பெருக்கத்தை தடுக்கவும், இதர நாடுகளுடன் இணைந்து பணியாற்ற  இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்று பேசினார்.



author avatar
Kaliraj