இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடர் ! இந்திய அணியில் இடம்பிடித்த 3 தமிழக வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 ஐ தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்,5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் உள்ளிட்டவற்றில் விளையாடவுள்ளது.இதில் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற நிலையில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது.

இதனிடையே டெஸ்ட் தொடர் நிறைவு பெற்ற பின் , 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் வருகின்ற மார்ச் 12-ஆம் தேதி நடைபெறுகிறது.5 போட்டிகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் டி-20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் சூர்ய குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ராகுல் திவாதியா ஆகியோருக்கு இந்திய அணியில் இடம்கிடைத்துள்ளது. கிஷன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற டி 20 அணியில் இடம் பெற்றிருந்த வருண் சக்ரவர்த்தி  பின்னர் தோள்பட்டை காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் , தற்போது அவர் அணியில் இடம் பெற்றுள்ளார்.ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்திய அணியில் தமிழக வீரர்களான நடராஜன் ,வருண்,சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி வீரர்கள் விவரம் :

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஹார்டிக், ரிஷாப் பந்த், இஷான் கிஷன் , சாஹல், வருண் சக்ரவர்த்தி, ஆக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவாதியா,  நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.