இந்தியா-இலங்கை ஒருநாள் தொடர் போட்டியின் தேதி மாற்றம் – பிசிசிஐ செயலாளர் அறிவிப்பு..!

இலங்கை கிரிக்கெட் அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வருகின்ற 13-ஆம் தேதி நடைபெறவிருந்த ஒரு நாள் போட்டி 18-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இலங்கை தொடரில் அனுபவம் வாய்ந்த வீரரான ஷிகர் தவான் கேப்டனாகவும், துணை கேப்டனாக புவனேஷ் குமாரும் செயல்படவுள்ளனர்.

இதில் ஒரு நாள் போட்டி வருகின்ற ஜூலை 13- ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 18- ஆம் தேதியும், டி 20 போட்டி ஜூன் 21 ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 25 ஆம் தேதி முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். இலங்கை அணியை சேர்ந்த மேலும் ஒருவருக்குதொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை தொடர்ந்து இலங்கை அணியின் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி.நிரோஷனுக்கு கொரோனா தொற்று உறுதியானது

இதனால் வீரர்களுக்கான வழக்கமான தனிமைப்படுத்தும் காலத்தைக் கூடுதலாக 3 நாட்கள் நீடித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்த நிலையில்,   பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா போட்டியின் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த ஜெய் ஷா  கூறியதாவது, ” இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட்  போட்டி வரும் 13ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் இலங்கை அணியில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 5 நாட்கள் தாமதமாக வரும் 18ஆம் தேதி தொடங்கும். 2-வது போட்டி 20- ஆம் தேதியும், 3-வது போட்டி 23-ஆம் தேதியும் நடக்கும். டி20 போட்டி 25, 27, 29 ஆம் தேதிகளில் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.